ரஷ்யாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பாடசாலை மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 100,000 ரஷ்ய ரூபிள்கள் (900 ஈரோக்கள்), கருவுறும் பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும், இது அவர்களது பிள்ளைகளை வளர்க்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, ரஷ்யாவின் பத்து மாகாணங்களில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாகக் குறைந்திருப்பதை சரி செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம், கடந்த மார்ச் மாதம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது பாடசாலை மாணவிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டில் இயங்கும், மக்கள் மனநிலையை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 43% மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகவும், 40% மக்கள் இதற்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஒரு நாட்டின் மக்கள் தொகை நிலைத்து இருக்க வேண்டும் என்றால், அங்கு சராசரியாக ஒரு பெண் 2-5 குழந்தைகள் பெற வேண்டும். ஆனால், கடந்த 2023 முதல், அந்நாட்டின் மக்கள் தொகை சராசரி அதாவது ஒரு பெண் 1-3 குழந்தைகளுக்கும் குறைவாக பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால்தான், ரஷ்ய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
ஆனால், ரஷ்ய அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறார் பருவ கருவுறுதல் அதிகரிப்பது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள். நாட்டின் ஜனாதிபதி விளாதிமீர் புடின், நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறார். அப்போதுதான், ராணுவத்தை பலப்படுத்துவது மற்றும் எல்லை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று நினைக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.








