திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெல்லென – மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஜீ.எம்.ரஞ்சித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் காட்டுப் பகுதிக்கு தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றுள்ளனர்.
இதன்போது யானை குறித்த நபர்களை தாக்க முற்பட்டபோது மூவரும் வெவ்வேறாக பிரிந்து சென்றதாகவும் இதனை அடுத்து ஒருவரை யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மொரவெவ பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த காட்டுப் பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.








