வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து போதைப்பொருளை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் தகவலின்படி, யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவும் புலனாய்வுப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
உடுவில் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின் போது, பார்சல் சேவையின் ஊடாக அனுப்பப்பட்ட வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 7 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.







