ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே இருக்கின்றன என மக்கள் போராட்ட இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் குற்றம்சாட்டினார்.
“அனுரா-மோடி திருட்டு ஒப்பந்தத்தை கிழித்தெறிப்வோம்” மற்றும் “ஐ.எம்.எப் மரணப்பொறியை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டம் நேற்று (2) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிருபாகரன், “இந்தியாவுடன் ஜனாதிபதி செய்த ஒப்பந்தங்கள் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோதும் இதுவரை பதில் இல்லை. இந்திய ஊடகங்களில் 10 ஒப்பந்தங்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்தியாவின் நலனுக்கே உகந்தவையாகும்,” என்றார்.

ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் நாட்டை வெளிநாட்டு பொருட்களின் சந்தையாக மாற்றும் நோக்குடன் மேற்கொள்ளப்படுவதாகவும், உள்ளூர் உற்பத்தியை கைவிட்டு புற்றுநோய்க்கு காரணமாகக் கருதப்படும் வெளிநாட்டு வெள்ளைச் சீனியை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். உள்ளூரில் உற்பத்தியாகும் கறுப்பு சீனிக்கு அதிக வரி விதிப்பதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட 4000 கோடி ரூபா முதலீட்டுச் செயல்திட்டம் மாணவர் போராட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கமும் முன்னாள் அரசுகளைப் போலவே பணத்திற்காக வேலைவாய்ப்பு உரிமைகள், கல்வி உரிமைகளை விலக்க முயலுகின்றதாகவும் விமர்சித்தார்.
முன்னாள் ஆட்சி தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், இன அடிப்படையில் சட்டத்தின் அமல்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறினார். செம்மணி புதைகுழி மற்றும் பட்டலந்த பிரச்சனை போன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து எச்சரிக்கை வெளியிட்டார்.
மலையக தொழிலாளர்களுக்கு வழிகாட்டப்பட்ட ரூ.2000 அடிப்படை சம்பள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும், 2500 ரூபா சம்பளம் வழங்க இயலுமென்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ், சிங்களம், முஸ்லீம், பறங்கியர் என அனைத்து இனங்களும் இணைந்து இனவாத அரசைக் கடந்து மக்கள் உரிமைக்காக ஒருங்கிணைந்த போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.










