முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) அரசியல் குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று (2) நடைபெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், “முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பமுள்ளது. இதை முறையாக கட்சிக்கு தெரிவிப்பேன். ஆனால் கட்சி எடுத்துக்கொள்ளும் முடிவையே நான் ஏற்க தயாராக உள்ளேன்,” என்றார்.
அதற்கு மேலாக, “என்னைவிட சிறந்த வேட்பாளரை கட்சி தேர்ந்தெடுத்தால், அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவேன்,” என்றும் தெரிவித்தார்.
சுமந்திரன், 2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 58,043 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற அவர், 2020இல் வாக்குகள் குறைந்தும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால், 2024 தேர்தலில் 15,039 வாக்குகளுடன் தோல்வி அடைந்த நிலையில், இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அடுத்த கட்ட அரசியல் இலக்காக முதலமைச்சர் பதவியை நோக்கி நகரும் சுமந்திரன், கட்சி ஒத்துழைப்பின் கீழ், புதிய பொறுப்பை ஏற்க தயாராக உள்ளார்.








