அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான குறைந்தளவு பயன்பாடுகளை கொண்ட காணிகள் மற்றும் சொத்துக்களில் உச்சப் பயன் பெறுவதற்காக அவற்றை பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபை, இலங்கை பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமாகவுள்ள குறைப்பயன்பாட்டை கொண்ட காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த காணிகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள கருத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட தனியார் முதலீடுகளுக்கு வழங்குவதற்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த காணிகளில் பெருந்தோட்ட அல்லது விவசாய நடவடிக்கைகள், பெருந்தோட்டத்துடன் தொடர்புடைய சுற்றுலாத்துறை மேம்பாட்டு நடவடிக்கைகள், கால்நடைவள அபிவிருத்தி, நீர் மின்னுற்பத்தி, சூரிய மின்னுற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடித்துறை மற்றும் ஏனைய பெருந்தோட்டத்துறை பொருளாதார புத்தாக்க நடவடிக்கைகளுக்கான முதலீடுகளுக்கு வாய்ப்புக்கள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளுக்குப் பொருத்தமான முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








