காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்தது. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா மாற்றங்களைச் செய்தால், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் ஒரு போர் தொடுக்கப்படும் எனப் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ மிரட்டல் விடுத்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்தது. அத்துடன், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களையும் தாக்கி அழித்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சிந்து மாகாணத்தில் நடைபெற்ற ஒரு கலாச்சார விழாவில் பேசிய பிலாவல் பூட்டோ, சிந்து நதி நீரைத் திசை திருப்புவது என்பது பாகிஸ்தானின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.
“இந்தியப் பிரதமர் மோடி, சிந்து நதியின் மீது தாக்குதல் நடத்தினால், அது நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று அர்த்தம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற தாக்குதலை நடத்த நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாண மக்களும் உங்களுடன் சண்டையிடத் தயாராக உள்ளனர் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் எச்சரித்தார்.
மேலும், இந்தப் போரில் இந்தியா நிச்சயம் தோற்கும் என்றும், பாகிஸ்தான் ஒருபோதும் தலைவணங்காது என்றும் அவர் கூறினார். இதற்கு முன்னர், பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசீம் முனீர், சிந்து நதி மீது அணை கட்டினால் ஏவுகணைகள் மூலம் அழிப்போம் என இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.








