இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தர அதிகாரியான திருமதி சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (2025.08.25) தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
திருமதி சசிதேவி ஜலதீபன் 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்ததிலிருந்து பல்வேறு முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 2003 முதல் 2006ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றிய அவர், பின்னர் 2015ஆம் ஆண்டு வரை பிரதேச செயலாளராகவும், அதன் பின்னர் பொலன்னறுவை மாவட்ட திபுலாகல பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், பின்னர் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சிலும் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரசுத் தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிலும் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பணியாற்றினார்.
2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், அதன் பின்னர் 2025 ஆகஸ்ட் மாதம் வரை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
நீண்டகால நிர்வாக அனுபவம், திறமையான வழிநடத்தல் மற்றும் சிறப்பான பணிசாதனைகளின் அடிப்படையில், திருமதி சசிதேவி ஜலதீபன் இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.









