இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு என்பதே வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட செயற்பாடாகும்.
அதற்கான நீதிப்பொறிமுறையை இந்த நாட்டில் கிடைக்காது என்பதன் காரணத்தினாலேயே சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரி நிற்கின்றோம்.
இதனை வலியுறுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள சர்வதேச நீதிகோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஊடக சந்திப்பு இன்று சந்திவெளியில் நடைபெற்றது.
வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சு.சுதாகரன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர் செ.நிலாந்தன்,வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சிவராசா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் இந்த நாட்டில் இன அழிப்புக்குள்ளான ஒரு சமூகமாக இருந்துவந்துள்ளது. இந்த இனஅழிப்பு பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் என்பது இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு செயற்பாடாகும்.
இந்த செயற்பாடுகளுக்கு இந்த நாட்டில் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. குற்றவாளிகளும் அடையாளம்காணப்பட்டார்கள். ஆனால் எவருக்கும் தண்டனை வழங்கப்படவுமில்லை,எந்த சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுமில்லை.
இதன்காரணமாகவே இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த இன அழிப்புக்கு சர்வதேச நீதிகோரிய போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
அந்தவகையில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு வடகிழக்கில் பாரிய பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பிரதான போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி கல்லடி பாலத்திலிருந்து பேரணியுடன் ஆரம்பமாகி காந்திபூங்காவரையில் பேரணியாக வந்து அங்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டங்களுக்கு கிழக்கில் வாழும் அனைத்து மக்களும் ஆதரவு வழங்கவேண்டும். தமிழ் மக்களுக்கு நடந்த அநீயாயங்களுக்கு சர்வதேச விசாரணையின் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.
எனவே அனைவரையும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு வலுசேர்க்குமாறு அழைக்கின்றோம். என தெரிவித்தனர்.








