‘உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை சந்தித்தலும்’ என்ற தொணிப் பொருளில் மாபெரும் விற்பனைக் கண்காட்சி வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (26) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச சபை, கோறளைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வேள்ட் விசன் நிறுவனம் ஆகியன இணைந்து இவ் விற்பனைக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் உற்பத்தி பொருட்கள், நஞ்சற்ற மரக்கறி வகைகள்,பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை தடுப்பதற்கான வகையில் துணியால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் என பல்வேறு வகையான உற்பத்தி பொருட்கள் உள்ளுர் உற்பத்தியாளர்களினால் மலிவு விலையில் சந்தைப்படுத்தப்பட்டன.

இவற்றினை பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயந்தி திருச்செல்வம் உதவி பிரதேச செயலாளர் டிலக்ஷினி சசிதரன் சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் மற்றும் வேள்ட் விஷன் நிறுவன இணைப்பாளர் ரி.ரொசாந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டு வைபவ ரீதி விற்பனை கண்காட்சி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.













