கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று (01) விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இறுதியாக மதுரையில் நடந்த மாநாட்டில் உரையாற்றும் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, இந்த விடயம் இலங்கை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக உரையாற்றியுள்ள ஜனாதிபதி அநுர, கச்சத்தீவை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.
விஜயின் இந்த உரைக்கு இலங்கையிலிருந்து அரசியல் தலைவர்களும் சமூக ஊடக பயனர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.








