தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிச் சரக்குத் தொகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த விமானம் மூலம், பரிசுப் பொருட்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்ட பொதியொன்றை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
சுங்க அனுமதி வழங்கப்படும் வரை களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொதியை நேற்று (31) விரிவாக பரிசோதித்தபோது, உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளில் இருந்து மரிஜூவானா மற்றும் ஹஷீஷ் உள்ளிட்ட 10.608 கிலோகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 10 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.








