மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று உப தவிசாளர் உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச சபை உப தவிசாளர் சர்வானந்தன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர், பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவிக்கையில், “குடிநீர் என்பது விற்பனை செய்யும் பொருள் அல்ல. அது இறைவனால் உயிரினங்களின் தாகத்தை போக்குவதற்காக படைக்கப்பட்ட இயற்கை வளம். அதை உறிஞ்சி விற்கும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினர்.
2018 ஆம் ஆண்டில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் ஊடாக ‘மாகா தண்ணீர் தொழிற்சாலை’ என்ற பெயரில் இதே இடத்தில் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அந்த அனுமதியை ரத்து செய்தது. அதேபோல, ஏறாவூர் பற்று பிரதேச சபையிலும் அனுமதி வழங்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் வேறு ஒரு வர்த்தகரின் பெயரில் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அண்மைய ஏறாவூர் பற்று அபிவிருத்தி குழுக் கூட்டத்தில், குறித்த தொழிற்சாலைக்கான அனுமதி கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, தண்ணீர் குறித்த ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன் அனுமதி வழங்கலாம் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பிரவு குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் தற்போது சுமார் 150 தண்ணீர் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தண்ணீர் வளம் மிகுந்த கம்பஹா போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ளன. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தகைய தொழிற்சாலை ஒன்று செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் வற்றுவதோடு விவசாயம், கால்நடை மற்றும் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்த பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
“அனுமதி வழங்கப்பட்டால், தமிழரசுக் கட்சி முன்னின்று மட்டக்களப்பு மாவட்ட மக்களுடன் இணைந்து பாரிய மக்கள் போராட்டம் நடத்தும்” என அவர்கள் எச்சரித்தனர்.








