மன்னார் சவுத்பார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 14 ஆயிரம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு அனுமதி பெற்றிருந்த மூன்று படகுகள் ஊடாக பெருந்தொகையான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த கடத்தல் நடவடிக்கைக்கு உதவியதாகக் கூறப்படும் 9 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை எதிர்வரும் 31ஆம் திகதி ஏலத்தில் விடுவதற்காக கொழும்பிலிருந்து திணைக்கள அதிகாரிகள் மன்னாருக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 9ஆம் திகதி 12 படகுகளில் இருந்து 60 ஆயிரம் கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டு, அவை 1 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








