1990ஆம் ஆண்டு சத்துருக்கொண்டான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடைபெற்ற படுகொலை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் இன்று (09) கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திலும், கொக்குவில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குழுவினரின் கோரிக்கையின் படி, அக்காலத்தில் சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் பகுதி அகழ்வு செய்யப்பட வேண்டும் என்றும், உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முறைப்பாட்டை பதிவு செய்தவர்களில் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுத் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் தயாள கௌரி, ரகுநாதன், சிவில் செயற்பாட்டாளர் லவகுகராசா ஆகியோரும், சட்டத்தரணிகள் கமல்ராஜ் மற்றும் தவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில், பெண்கள் 85 பேர், 10 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் 42 பேர், வயோதிபர்கள் 25 பேர் உட்பட மொத்தம் 186 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை இடம்பெற்று இன்று 35 வருடங்கள் நிறைவு பெறும் நிலையில், இதுவரை எந்தவொரு நீதியான விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை என்று நினைவேந்தல் குழுவினர் குற்றம் சாட்டினர்.
“வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்ற செம்மணி மற்றும் பல படுகொலைகளுக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சத்துருக்கொண்டான் படுகொலைக்கான உண்மைகளும் வெளிக்கொணரப்பட வேண்டும்.
உள்ளக விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச நீதிமன்ற நடைமுறைகளின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும்” என நினைவேந்தல் குழுத் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் தெரிவித்துள்ளார்.


















