அமரர் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள நினைவு ஊர்திப் பயணம் இன்று (15) திருக்கோவில் பகுதியில் தொடங்கியது.
இந்த நிகழ்வில், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையேற்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடக்க நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் கல்லறையில் மலர்மாலை அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் அமரர் திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
அதன்பின், திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய வாகனம் திருக்கோவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, பொத்துவில், ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை மற்றும் பாண்டிருப்பு உள்ளிட்ட அம்பாறை மாவட்ட தமிழர் பகுதிகளுக்கு சென்றடைந்து அங்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மற்றும் வடகிழக்கின் பல்வேறு மாவட்டங்களில் ஊர்தி பயணம் நடைபெற்று, இறுதியில் அமரர் திலீபனின் நினைவேந்தல் தினத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நினைவிடத்தில் நிறைவு பெறவுள்ளது.












