நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும், அதன் பின்னர் வெளியேற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “நான் இன்னும் அதிக காலம் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை. உங்களை நீண்ட காலம் தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களே இங்கு இருப்பேன்” எனக் குறிப்பிட்டார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டத்தில் பொதுமக்களின் பிரச்சினைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, தாம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
வட மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் சம்பவங்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆவண ஆதாரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரிடமும் சமர்ப்பித்த போதிலும், இதுவரை எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும், அந்த விவகாரத்தை வெளிப்படையாக எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டதாகவும் அர்ச்சுனா இராமநாதன் குற்றம்சாட்டினார்.
தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் சட்ட நடவடிக்கைகள், வடக்கிலிருந்து தெரிவான சுயேட்சை பிரதிநிதிகள் குறிவைக்கப்படுகின்றனர் என்ற எண்ணத்தை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுயேட்சை உறுப்பினர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அனைவருக்கும் சமமான அணுகுமுறை உறுதி செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தினார்.








