இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய மறுசீரமைப்பு மாதிரியை ஏற்க விரும்பாத ஊழியர்கள், இழப்பீட்டுடன் விலகும் வாய்ப்பு பெறுவார்கள் என மின்சார அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அவர் இந்த அறிவிப்பை, நேற்று (15) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகச் சந்திப்பில் வெளியிட்டார்.
அமைச்சர் கூறுகையில், மின்சார சபையை நான்கு முக்கிய பிரிவுகளாக – உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் அமைப்பு மேலாண்மை – பிரித்தாலும், உரிமை அரசாங்கத்திற்கே சொந்தமானதாகவே இருக்கும். புதிய பிரிவுகளில் ஊழியர்கள் அனைவரும் இணைக்கப்படுவார்கள் என்றும், இணைவதற்கு விருப்பமில்லாதவர்கள் தன்னார்வத்துடன் விலகும் வாய்ப்பு பெறுவார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.

விலக விரும்பும் ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ. 500,000 வரை இழப்பீடு வழங்கப்படும். மேலும், மின்சார சபை முந்தைய அமைப்பில் தொடர்ந்திருந்தால், ஆகஸ்ட் 27க்கு பின் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாதம் 2ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி பதில்கள் வழங்கப்பட்டபோதும், மறுநாள் புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகள் நடைமுறைக்கு இயலாதவையாகவும், மின்சார சபை மறுசீரமைப்பை தடுக்க முனைவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.








