இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி, “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இன்று (17) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைத்தார்.
இம்முகாம் செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெறும். இதில் கண்புரை உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கான பரிசோதனைகள், சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
சவூதி அரசின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் மற்றும் அல்-பஸர் சர்வதேச அமைப்பு இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், பொருளாதார சிக்கலால் சிகிச்சை பெற முடியாத ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி,
உலகளாவிய மனிதாபிமான பணிகளில் சவூதி அரேபியாவின் அர்ப்பணிப்பு மதிப்புகளை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் வழங்கி வரும் தலைமையைப் பாராட்டினார்.
கிங் சல்மான் உதவி மையம், அல்-பஸர் அமைப்பு மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை பணியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பிரபாஷங்கர், சவூதி அரசின் இம்மனிதாபிமான உதவி இலங்கையுடன் உள்ள நட்பு உறவை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், “சவூதி நூர்” திட்டத்தின் அடுத்த கட்டமாக, செப்டம்பர் 22 முதல் 28 வரை எம்பிலிபிடிய அரச வைத்தியசாலையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.


















