தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம் உலகில் உள்ள தேசிய இனங்களில் தமிழ் தேசிய இனமும் ஒன்று என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (22) மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
கடந்த 75 வருடங்களாக வடகிழக்கில் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்று அபிவிருத்திகளை செய்தவர்களை இன்று மக்கள் புறகணித்துள்ளனர். அத்துடன் அவர்களை அவர்கள் சார்ந்த கட்சிகளும் புறக்கணித்துள்ளன. காரணம் அவர்கள் என்னதான் அபிவிருத்திகளை செய்தாலும் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டது தங்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காகவே. அதனை அரச கட்சிகள் தெரிந்து கொண்டு ஒரு காலத்தில் அவர்களை கைவிட்டு விடுகின்றனர்.

ஆனால் தமிழரசுக் கட்சி என்பது தமிழ் தேசியத்தின் வழியில் பயணிக்கும் ஒரு கட்சி என்பதால் தான் அது கடந்த 75 ஆண்டுகளாக வடகிழக்கில் வெற்றி பெற்று வருகிறது.
காரணம் தமிழரசுக் கட்சி ஒரு தேர்தலுக்கான கட்சி அல்ல. அது வடகிழக்கில் உள்ள மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி. இந்த கட்சியை தந்தை செல்வா உருவாக்கும் போது வெறுமனே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக உருவாக்கவில்லை.
தமிழ் அரசு என்பது வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கான நிழல் அரசாக செயற்பட வேண்டும் என்ற நோக்கிலே அந்த கட்சி உருவாக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழ் தேசியத்தை வளர்ப்பதில் நாம் முன் நின்று செயற்பட வேண்டும். இலங்கையில் தமிழ் தேசியம் என்பது இலங்கையின் சிங்கள தேசியத்தில் இருந்து எந்த இடத்தில் வேறுபடுகிறது என்பதுதான் கேள்வி. வடகிழக்கில் உள்ள மக்கள் சிங்கள பெரும்பான்மை அரசுக்கு நிகரான கட்டமைப்புகளை கொண்டு விளையாட்டுத்துறை, விவசாயம், கல்வி என அனைத்து துறைகளிலும் முன்னெற வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி செயற்படுவதற்கான வளங்களையும், உதவிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
எமது இளைஞர்கள் எதிர் காலத்தில் இலங்கை தேசிய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக எமது புலம்பெயர் சமூகமும் உதவிகளை வழங்க வேண்டும். புலம்பெயர் சமூகம் நினைத்தால் வடகிழக்கில் அரசுக்கு இணையான பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கி செயற்பட முடியும் என தெரிவித்தார்.








