இலங்கையின் யாப்பில் 1987 கொண்டுவரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறையில் எந்தவிதமான திருத்தங்கள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை எனவே அரசியல் யாப்பிலும் மாகாணசபை சட்டத்தின் ஊடாக அன்று வழங்கப்பட்ட அத்தனை அதிகாரங்களும் முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் இது அரசின், ஜனாதிபதி, அமைச்சர், பாராளுமன்றத்தின் கடமை ஆனால் கடந்த 8 வருடங்களாக மாகாண ஆட்சி இல்லாத நிலைமை இருக்கின்றது. இது ஒரு ஜனநாயக விரோதமான செயல் என முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று முன்தினம் (29) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மாகாண ஆட்சி முறை முழுமையான அதிகாரங்களுடன் முறையாகவும் இந்த நாட்டில் நடைமுறையில் செயல்பட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் அனைத்தினதும் இலங்கையில் வாழ்கின்ற தேசிய சிறுபான்மையினரதும், தென் இலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளின் ஒழுங்குபட்ட குரலாகவும்? இந்த கோரிக்கை எழவேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பாடுகளை கடந்த மாதத்தில் இருந்து ஆரம்பித்துள்ளேன்.
இந்த வகையில் இரண்டு நாட்களாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட சமூக பிரதிநிதிகள் அரசியல் தலைவர்கள் எழுத்தாளர்கள் உட்பட சமூக பிரமுகர்கள் உட்பட பலரை சந்தித்து வருகிறேன்.

இந்த நாட்டில் மாகாண ஆட்சி முறை மிக வலுவானதாகவும் காத்திரமானதும் சுயாதீனமானதாகவும் நடைபெறுவது மிக மிக அவசியமானது. இந்த நாட்டிலுள்ள தேசிய சிறுபான்மை இனங்களுடைய பிரச்சினைகள் அவர்களின் அடிப்படை தேவைகள் கவனிப்பதற்கும் நாட்டில் பிராந்திய ரீதியான அபிவிருத்தி மேற்கொள்வதற்கும் இந்த நாட்டில் அதிகாரங்கள் குவிந்திருக்கும் வகைய இல்லாமல் ஒரு மத்திய அரசிடமும் ஜனாதிபதியிடம் குவிந்திருக்கும் முறையே இங்கு இருக்கின்றது.
எனவே அவை அவை மாகாணங்களை நோக்கி அந்த அதகாரங்கள் பகிரப்பட வேண்டும். அது ஜனாநாயத்தினுடைய கோரிக்கை. அந்த வகையில் மாகாண ஆட்சி முறை முழுமையான அதிகாரத்துடன் செயற்படும் நிலை இன்று உருவாக்கப்பட வேண்டும். இது உண்மையில் அரசின், ஜனாதிபதி, அமைச்சர், பாராளுமன்றத்தின் கடமை ஆனால் இங்கே கடந்த 8 வருடங்களாக மாகாண ஆட்சி இல்லாத நிலைமை இருக்கின்றது. இது ஒரு ஜனநாயக விரோதமான செயல்.
எனவே இப்போதாவது அந்த மாகாண ஆட்சிகளுக்காக மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்பட வேண்டும் அதன் மூலமாக மாகாணங்களில் மக்கள் ஆட்சி நிலைபெற வேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு மாகாணங்களில் மக்களின் அடிப்படையில் ஒவ்வொரு விடயங்களும் கவனிக்கப்படும் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் அதன் மூலம் இந்த நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படுமே தவிர ஆட்சியாளர்கள் தாங்கள் இனவாதிகள் இல்லை என்பதால் அது நடைபெறமாட்டாது.

நடைமுறையில் இன நல்லிணக்கம் ஏற்படுகின்ற வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் அதில் மிக பிரதானமானது மாகாண ஆட்சிகள் முறையாகவும் முழுமையாகவும் இங்கு செயல்பட வேண்டும் எனவே அரசாங்கம் எந்தவிதமான காரணங்களையும் கூறாது உடனடியாக மாகாண ஆட்சிக்கான தேர்தல்களை நடத்த வேண்டும் அதற்கு முழுமையான அதிகாரங்களை எப்படி வழங்கப் போகிறார்கள் என திட்டங்களை வெளியிடவேண்டும்.
அது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களுடன் அரசாங்கம் பேச வேண்டும் இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வருவதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் சமூகத்தில் இருக்கும் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த விடையத்தில் அக்கறையும் விழிப்புணர்வும் கொண்டு செயல்பட வேண்டும்.
அந்தடிப்படையில் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல அதன் தொடர்பாக முஸ்லிம் தலைவர்களான ஹசன்அலி , அதாவுல்லா ஆகியோரை சந்தித்து இந்த அதிகார பகிர்வுக்கான ஒரு ஜனநாயக இயக்கத்தை எல்லோரும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த குரலை வலுவானதாக வெளிக்கொண்டு வரவேண்டும். இந்த கோரிக்கை அனைத்து மக்களினது கோரிக்கையாகவும் தேசிய சிறுபான்மையினது கோரிக்கையாகவும் வெளிவர வேண்டும் என்ற செயற்பாடுகளில் மேற்கொண்டு வருகிறார்.
சமஸ்டி மட்டுமல்ல அதற்கு மேலாக இணைப்பு ஆட்சி எல்லாம் வரலாம் அது எல்லாம் இப்போது சாத்தியம் இல்லை. எனவே அதை கோருகின்ற கட்சிகள் அதை கோரட்டும் ஆனால் இன்று இருக்கின்ற நிலை இப்போது அரசியல் யாப்பில் இருக்கும் மாகாண ஆட்சி முறையை முறையாக அதில் உள்ள அதிகாரங்களை முழுமையாகவும் வழங்குவதன் மூலம் காத்திரமான விடயம் ஏற்படும். அந்த விடயங்களை அடிப்படையாக கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணம், மலையக மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இருக்கும்.

அதேவேளை எந்த விடயமும் ஒரே பாய்ச்சலில் இடம்பெறுவதில்லை. ஒரு நீண்ட கால வேலைத்திட்டங்கள் ஊடாகவும் நீண்டகால அரசியல் வேலைத்திட்டம் ஊடாகவும் பல்வேறு அரசியல் கட்டமைப்பு ஏற்படும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தீவிரமாக கோரிக்கைகளை கோருபவர்கள் சிங்களவர் மத்தியிலும் இருக்கின்றனர் தமிழர்கள் மத்தியிலும் இருக்கின்றனர். அதேவேளை இப்போது இருக்கின்ற மாகண ஆட்சி முறையில் பயன் இல்லை என சொல்பவர்கள் ஒரு பக்கம் அதனால் அது வேண்டாம் என்று சொல்லுகின்றனர்.
அதேபோல் சிங்களவர் மத்தியில் வேண்டாம் என சொல்லுவதற்கு இன்னொரு விதமாக மாகாண ஆட்சி தேவை இல்லை அது வெள்ளை யானைகள் அதில் பயன் இல்லை என அவர்கள் ஒருபக்கம் இவ்வாறு இரண்டு பகுதியினர் மாகாண ஆட்சி முறைக்கு தடையாக இருக்கிறார்கள் என்றால் கூட அவர்களது குரல் இந்த நாட்டினுடைய பெரும்பான்மையான குரல் அல்ல என்பதை மிக ஆணித்தரமாக கூற விரும்புகிறேன்.
1987 ம் ஆண்டு அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாகவும் அதனுடன் தொடர்ச்சியாக வந்த மாகாணசபை சட்டத்தின் ஊடாகவும் உருவாக்கப்பட்ட மாகாண சபை ஆட்சி அதிகாரங்கள் பாராளுமன்றத்திலும் அடுத்தடுத்து வந்த ரசாங்கங்களாலும் அதற்கு இடையூறு செய்யப்பட்டது அல்லது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் 13 திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பில் எந்தவிதமான திருத்தங்கள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை.
ஆனபடியால் அந்த அதிகாரங்கள் அரசியல் யாப்பில் அப்படியே இருக்கின்றது. அது தொடர்பாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் திருத்தம் செய்திருந்தால் அவை தற்காலிகமானவை அதனால் தான் கூறுகின்றோம் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் வேண்டும் என்றால் சில சட்டங்களை உருவாக்கி கொள்ள வேண்டியிருக்கும் அதேவேளை கடந்த காலத்தில் பிழையாக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மற்றும் தவறான சுற்றறிக்கை வழங்கப்பட்டிருந்தன அவைகள் எல்லாம் வாபஸ் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.








