மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மக்களின் நன்மை கருதி வாவி சூழல் கற்கை நிலையமும் சூழலியல் பூங்காவும் 2010 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை அந்த கற்கை நெறிக்கு இதுவரை பயன்படுத்தாமல் அதனை ஒரு விளையாட்டு கழகம், வாடிவீடாக 15 வருடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதனை உடனடியாக நிறுத்தி இதற்கான ஆளணிகளை நியமித்து, உரிய கற்கை நிலையம் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெது அமைப்புகளும் மற்றும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் கா. முத்துலிங்கம் ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டல் தாவர உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக 2002 ம் ஆண்டு மிதிரிகிரியவில் இடம்பெற்ற மீன்பிடிப்போர் சம்மேளனத்தின் கூட்டத்தில், மட்டக்களப்பு பாலமீன்மடுவில் இந்த பயிற்சி நிலையம் அமைப்பதற்கு கோரிக்கை விடப்பட்டதையடுத்து, அதற்கமைய குறித்த கற்கை நிலையம் மகிந்த சிந்தனையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நெக்டெப் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு, 2010 ம் ஆண்டு செட்டம்பர் 26 ம் திகதி சர்வதேச சுற்றுலா தினத்தையிட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த கட்டிடத்தை சூழல் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்காக மாவட்டத்திற்கு பயன் பெறுவதற்கு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இருந்தபோதும் அப்போது முதலமைச்சராக இருந்த பிள்ளையான் என்றழைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் சிபாரிசில் குறித்த கற்கை நிலையத்தையும் சூழலியல் பூங்காவையும் என்ன தேவைக்காக கட்டப்பட்டதொ அதனை செயல்படுத்த அங்குள்ள விளையாட்டு கழகம் ஒன்றுக்கு ஒருவருட காலத்துக்கு, 15 நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டு, இன்று 15 வருடங்களாகியும் இந்த அரச கட்டிடத்தை குறித்த விளையாட்டு கழகம் ஆக்கிரமித்து வருகின்றது.

இது மட்டுமல்ல பயிற்சி அளிப்பதற்காக கட்டப்பட்ட பயிற்சி நிலையம் என பெரியளவில் முன்னுக்கு பெயர் பலகையை காட்சிப்படுத்திக்கொண்டு அரச கட்டிடத்தை இந்த பெயருக்கு அர்த்தம் தெரியாமல் விடுதியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதுடன் அரச கட்டிடத்தை குத்தகைக்கு விடுவது என்றால் குறைந்தது ஒரு வருடத்துக்கு ஒருமுறை கேள்வி நடைமுறை பின்பற்றி வழங்கி இருக்க வேண்டும்.

அவ்வாறு எதுவும் இல்லாமல் ஒரு ஊழல் மோசடியாக ஒரு விளையாட்டு கழகம் அதுவும் அரச சொத்தை முறைகேடாக கையகப்படுத்தி வருகின்றது. எனவே இது எந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்டதே அந்த நோக்கத்தை செயற்படுத்துவதற்கு அந்த கட்டிடத்தை அரசாங்கம் மீளப் பெற்று ஆளணிகளை நியமித்து செயற்படுத்தவும்.
இதேவேளை இது தொடர்பாக கிழக்கு மாகாண கணக்காய்வாளர் அலுவலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, அரசாங்க அதிபர், மாநகர ஆணையாளர் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, உள்ளிட்டவர்களுக்கு கடிதங்கள் மூலமாக பாலமீன்மடு நீரக வளங்கள் அபிவிருத்தி சங்கம், சமூக பொலிஸ் குழு, மற்றும் மீனவர் சங்கங்கள் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்து, இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.









