ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து மாற்று திறனாளிகளை கையாண்ட சமூகம் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் மாற்று திறனாளிகள் குறித்து சிந்திக்க தவறிவிட்டோம் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பில் உள்ள குடும்பங்களில் ஏற்படும் மரண சடங்குகளை நடத்துவதற்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 15 வீதம் பேர் மாற்று திறனாளிகளாக உள்ளனர். இலங்கையை பொறுத்தவரை சுமார் 17 இலட்சம் பேர் மாற்று திறனாளிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் 15 இலட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் 2019 ம் ஆண்டு வரை சுமார் 7444 பேர் மாற்று திறனாளிகளாக இருப்பதாக கூறப்படுகிறது அது இன்று இன்னும் அதிகரித்திருக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் மாற்று திறனாளிகளாக மாறியவர்கள் 4000 பேர் வரை உள்ளனர் . ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பில் பதிவு செய்யப்பட்டவர்கள் 853 பேர் உள்ளதோடு பதிவு செய்யப்படாத மாற்று திறனாளிகள் 138 பேர் உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
இன் நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்து பதினாறு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் மாற்று திறனாளிகளை கையாள்வதில் நாம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம்.
ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து செயற்பட்டதால் மாற்று திறனாளிகளை அவர்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி கையாண்டதால் மாற்று திறனாளிகள் குறித்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது.
ஆனால் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் மாற்று திறனாளிகள் குறித்து சிந்திக்க தவறிவிட்டோம். இருந்தும் இங்கு ஒன்றிணைந்துள்ளவர்கள் எமது மாற்று திறனாளிகள் குறித்து சிந்தித்ததால் அவர்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர் .
மிக முக்கியமாக ஏறாவூர் பற்று ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பில் உள்ள குடும்பங்களில் ஏற்படும் மரண சடங்குகளை நடத்துவதற்கான உதவிகளை செய்வதற்கு ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கான உதவிகளை பெற்று கொடுத்து வருகின்றோம் .
அந்த வகையில் ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பிரான்ஸ் நாட்டில் உள்ள துளிர் அமைப்பின் ஊடாக புலம்பெயர் உறவுகள் வழங்கிய நிதி உதவிகளை கொண்டு செங்கலடி சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக நான்கு இலட்சத்தி நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான கூடாரம் , கதிரைகள் , சமையல் பாத்திரங்களை பெற்றுக் கொடுத்துள்ளோம் . இதேபோல் இங்குள்ள பலரும் மாதாந்த உதவிகளை செய்து வருகின்றனர் . எனவே தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது . ஒரு தேசமாக ஒன்றிணைந்து மாற்று திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள் என கூறினார் .








