நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா செவ்வந்தி அளுத்கம, தொடந்துவ மற்றும் மித்தெனிய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் நேற்று (19) கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கெஹெல்பத்தற பத்மே’யின் ஆலோசனைக்கு அமைய, இஷாராவின் தோற்றத்தை ஒத்த யுவதி ஒருவரைத் தேடும் பணியின்போது, ‘ஜஃப்னா சுரேஷ்’ என்பவரை ‘தக்ஷி’ என்ற யுவதி சந்தித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ‘தக்ஷிக்கு சிங்கள மொழி தெரியாத நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுரேஷ் அவரை நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி, ‘தக்ஷி’ எதுவுமே அறியாமல் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்தனர்.
முன்னதாக, இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், மத்துகம வெலிபென்ன பகுதியில் அவருக்கு தங்குமிடம் வழங்கிய காவல்துறை கொன்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவியின் தாயார் உட்பட நான்கு சந்தேக நபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
கொன்ஸ்டபிளின் மனைவியின் தாயார் நேற்று சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

பின்னர் அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் கே.கே. நாணயக்கார உத்தரவிட்டார்.
இதேவேளை, நேபாளத்திலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தினேஷ் குமார எனப்படும் கம்பஹா பபாவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி, கட்டான, மஹாபாகே பகுதியில் உள்ள கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள 18ஆவது மைல் கல் பகுதியில் மறைத்து வகைப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்பட்டும் சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த தோட்டாக்கள் கெஹல்பத்தர பத்மேவினால் வழங்கப்பட்டதாகவும் அவருக்குத் தெரிவித்துள்ளார்.








