இன்றைய தீபத்திருநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனிலும் பல்வேறு ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனில், பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும் ராமகிருஷ்ண மடத்தின் துறவியுமான ஸ்ரீமத் சுவாமி அபவர்கானந்தஜி மஹராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதேவேளை, இலங்கை சாரணர் சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “சாரணர் வாரம் – 2025” நிகழ்வும் தீபத்திருநாளை ஒட்டி மட்டக்களப்பில் வெகு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வு மாவட்ட சாரணர் தலைவர் ரி. ருத்தரகரன் அவர்களின் ஒருங்கிணைப்பில், கல்லடி உப்போடையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிசன் மற்றும் இராமகிருஷ்ண பரமஹம்சர் கோவில் வளாகங்களில் நடைபெற்றது.
நிகழ்வில் உதவி மாவட்ட ஆணையாளர்கள் அ. நிசாந்தன், எம். சந்திரசுசர்மன், என். பிரதீபன் உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட சாரணத் தலைவர்கள், சாரணர்கள் மற்றும் பெற்றோர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது விசேட வழிபாடுகள், மாணவர்களுக்கான நற்சிந்தனை உரைகள் மற்றும் ஆசி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வு முடிவில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.






















