மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) திங்கட்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
பன்சேனை வாதகல்மடு வைச்சேர்ந்த 58 வயதுடைய, 4 பிள்ளைகளின் தாயாரான வைரமுத்து மலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தகரத்தினால் அமைத்த வீட்டில் தனியாக சம்பவ தினமான அதிகாலை 2.00 மணியளவில் நித்திரையில் இருந்துள்ள நிலையில் வீட்டில் இருந்த நெல்லை உண்பதற்காக காட்டு யானை வந்த சத்தத்தை கேட்டு எழும்பி வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடிய போது யானை அவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்
இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யானை தாக்கி இறந்தமைக்கான பத்து இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரம் முதல்கட்டமாக மரண சடங்கிற்காக ஒரு இலச்சம் ரூபாய் காசோலையை உயிரிழந்தவரின் மகனிடம் கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








