தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்களை நீக்கி, தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் கல்முனையில் சிறப்பு செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சனிக்கிழமை (25) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற இச்செயலமர்வு, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் பேரில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் டொக்டர் எம்.எச்.றிஸ்பின், டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன், சுகாதார வைத்திய அதிகாரிகள், உலமாக்கள், ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செயலமர்வில் தடுப்பூசியின் அவசியம், தடுப்பு மருந்தேற்றல் சவால்கள், பொதுமக்கள் மத்தியில் நிலவும் தவறான நம்பிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஏற்றாமையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விஞ்ஞானரீதியான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பிராந்தியங்களில் விழிப்புணர்வு பட்டறைகள் நடத்தி, தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

















