கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய ‘MSC Elsa 3’ கொள்கலன் கப்பலிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் முதல் காலி வரை உள்ள கடற்கரைப் பகுதிகளில் இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருவதாகவும், பருவமழை காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகளில் சுமார் 1,800 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான அனைத்து செலவுகளையும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனமே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல்சார் சூழலியல் அமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட்டு, அறவிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை கணக்கிடுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைபீரியக் கொடியின் கீழ் இயங்கிய ‘MSC Elsa 3’ கப்பல், இந்தியாவின் கேரளக் கடற்கரைக்கு அப்பால் சுமார் 38 கடல் மைல் தொலைவில் நீர் கசிவுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கடந்த மே 25ஆம் திகதி கடலில் மூழ்கியது.
விபத்து நேரத்தில் கப்பலில் 643 கொள்கலன்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








