உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து வந்த சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்ததாகக் கூறப்படும் இரு குழந்தைகளின் தாயொருவரை எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உடுகம பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹிதும ஹல்விட்டிவல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த பெண் உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று, தனது கைப்பேசியை காகிதத்தால் மறைத்தபடி சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி பதிவு செய்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தக் காணொளி பதிவு ஏதேனும் குற்றச்செயலுக்கான முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த கன்னங்கரவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








