மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரை பகுதிக்குள் ஊடுருவியுள்ள காட்டுயானைகளை இரண்டு தினங்களில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம், இராணுவத்தினர் இணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாவும் இலங்கை தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரை பகுதியில் சில வாரங்களாக தொடரும் காட்டு யானை அட்டகாசத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (28)மாலை மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஏற்பாடு செய்த இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் தெட்சணாகௌரி தினேஸ், பிரதேச சபை தவிசாளர் செந்தில்குமார், வனவிலங்கு திணைக்கள அதிகாரி சுரேஸ், மற்றும் குருக்கள்மடம் இராணுவ முகாம் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த சில வாரங்களாக மண்முனை பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலமுனை, தாழங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் ஆகிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மற்றும் அதன் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பாக குறித்த கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளில் புகுந்துள்ள காட்டுயானைகள் தொடர்பிலும் அவற்றினை வெளியேற்றுவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்பி.மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்ற இந்த தருணத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பது வழமையான ஒரு விடயம்.
ஆனால் இப்போது வழமைக்கு மாறாக நகர் பகுதிகளிலும் குறிப்பாக மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிலும் உள்ள பகுதிகளிலும் கடந்த வாரமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணக் கூடியதாக இருக்கின்றது.
கடந்த வாரம் இந்த பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்ற அமர்வு நிறைவு பெற்றதன் பின்னர் அமைச்சரிடம் இவை தொடர்பாக பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றோம்.

வனவிலங்கு துறையினரிடம் நாங்கள் இது தொடர்பாக பேசிய போது அவர்கள் கூறியது அவர்கள் பணி புரிவது வன விலங்குகளை பாதுகாப்பதற்காக எனவும் யானைகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்கான பொறிமுறை தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தனர். இந்த விடயங்கள் தொடர்பாக கடந்த வாரம் அமைச்சரிடம் பேசி இருந்தோம்.
குறிப்பாக இந்த வனவிலங்கு திணைக்களத்தில் அதிகளவான அலுவலகங்களை அமைக்க வேண்டும் அத்தோடு திணைக்களத்திற்கான ஊழியர்களையும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்திருக்கின்றோம். இருப்பினும் வனவிலங்கு துறைக்கான அமைச்சர் மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆறு மாதங்கள் கடந்தும் நியமிப்போம் என கூறியவர்களை இன்னுமும் நியமிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவிலங்கு திணைக்களத்திக்கு யானை மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து ஊழியர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். ஆகவே இந்த விடயத்தில் எவராவது ஒருவரின் உயிரிழப்பு இடம்பெற்றதன் பின்னர் இந்த விடயத்தை பற்றி பேசுவதோ அல்லது கூட்டங்கள் நடத்துவதோ பிரயோசனம் இல்லாத ஒரு விடயம். இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற முன்னர் அதனை நாங்கள் தடுக்க வேண்டும்.
எனவே இவ்வாறான இந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து ஊழியர்களை மாத்திரம் கொண்டு இந்த வேலைகளை முன்னெடுக்க முடியாது என்பதனால் எமக்கு ஒரு ஆலோசனை கிடைக்கப்பெற்று இருக்கிறது. அந்த வகையில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதியுடன் பேசி அதே போன்று மட்டக்களப்புக்கு பொறுப்பான கட்டளை தளபதியுடனும் பேசி அத்தோடு குருக்கள்மடம் ராணுவ முகாமிற்கு பொறுப்பான அதிகாரியுடனும் கலந்துரையாடி இன்று இரவு முதல் அவசரமாக இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந்த யானைகள் பகல் நேரங்களில் எந்த பகுதியில் இருக்கின்றது என்பதனை கண்காணிப்பதற்கும் அதனை இப்பகுதியில் இருந்தே வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோறியுள்ளேன்.
இன்று இருந்து இரண்டு நாட்களுக்குள் இந்த யானைகள் எப்பகுதியில் இருக்கின்றது என்பதனை உடனடியாக தவிசாளருக்கோ அல்லது எனக்கோ அல்லது வனவிலங்கு திணைக்களத்தினருக்கோ தொலைபேசி அழைப்பின் ஊடாக தெரியப்படுத்தினால் நாங்கள் உடனடியாக ராணுவத்தினருக்கும் தெரிவித்து அவற்றுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.








