அரசியல் தீர்வுக்கான 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் மறுத்தது வேறு விஷயம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கே சொந்தமானது.
ஏனெனில், அது 1988 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இதை செயல்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்குத் தேவையான 159 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மை அநுர அரசாங்கத்திடம் ஏற்கனவே உள்ளது.
அதாவது, தேர்தல் முறைமையையே மாற்றும் அதிகாரம் கூட அரசாங்கத்திடம் இருக்கிறது.
ஆனால் வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியபோது, அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சிகளிடம் தள்ளியதன் பின்னணி என்ன?
சாதாரணமாக, தேர்தல் காலங்களில் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சிங்கள அரசியல் தலைவர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வுகளைப் பற்றி இனிமையான வாக்குறுதிகளை வழங்குவர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும்,
A) “அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்” என்பர்,
B) “தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஆலோசனை வேண்டும்” என்பர்,
C) “சர்வகட்சி மாநாடு அவசியம்” என்பர்,
D) “மகாநாயக்க தேரர்களின் கருத்தை கேட்க வேண்டும்” என்பர்.
இவ்வாறு பல காரணங்களைச் சொல்லி, “எல்லோருடைய கருத்துக்களையும் பெற வேண்டும்” என்ற பெயரில், அரசியல் தீர்வுக்கான பொறுப்பு தங்களிடமிருந்து பிறரிடமாே தள்ளிவிடப்படுகிறது.
இது புதிய ஒன்று அல்ல 1980களில் ஜே.ஆர். ஆரம்பித்த “மாவட்ட அபிவிருத்தி சபை” என்ற அரைகுறை தீர்வு முறையிலிருந்து இதே பந்து வீச்சு விளையாட்டு தொடர்கிறது.
இப்பின்னணியில், ஜேஆருக்கு சளைத்தவன் அல்ல என்பதைக் காட்டும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் புதிய பந்தை வீசினார்.
2017ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார் அவர். ஆனால், தேர்தல் எப்போது நடைபெறும் என்பதைப் பற்றி தெளிவாகச் சொல்லாமல், “பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்க வேண்டும்” என்று கூறி அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சிகளின் தலையில் ஏற்றி விட்டார்.
இதுவே சிங்கள அரசியலின் பழைய பாணி. 2009க்கு பின் சில அரசியல் பிரதிநிதிகள் 13ஆவது திருத்தம் “நாட்டைப் பிரிக்கும் சட்டம்” என்று கூறத் தொடங்கினர். அதனை நிறைவேற்றாமல், இரத்துச் செய்யவே விரும்புகின்றனர்.
அந்த எதிர்ப்பிலிருந்து தப்பிக்க அநுர ஒரு நுண்ணிய அரசியல் விளையாட்டை நடத்துகிறார் — ஆனால், எதிர்க்கட்சிகள் அந்தப் பந்தை பிடிப்பார்களா என்பதே கேள்வி.
அநுரவிடம் அறுதிப் பெரும்பான்மை இருக்கும்போது கூட, “பொருத்தமான தேர்தல் முறைமை” உருவாக்க முடியவில்லை என்றால், அது அரசியல் விருப்பமின்மையே தவிர வேறில்லை.
தமிழ் பிரச்சினை வந்தால் மட்டும் “எல்லோரின் ஒத்துழைப்பும் தேவை” என்ற காரணத்தைக் கூறுவது, 1948 முதல் இன்றுவரை நீடிக்கும் சிங்கள அரசியலின் அடையாளமாகவே இருந்து வருகிறது.
ஆனால், தேர்தல் காலங்களில் தமிழர்களின் வாக்குகள் தேவைப்படும்போது —
“நாங்கள் அரசியல் பந்து வீச்சு விளையாடமாட்டோம்” என்றே கூறுவார்கள்.
1994இல் சந்திரிகா வழங்கிய வாக்குறுதி என்ன ஆனது?
அதேபோல், 2024இல் அநுர வழங்கிய
“தமிழர்களின் பிரச்சினை எங்களின் பிரச்சினை”,
“தென்பகுதியின் மாற்றத்திற்குள் தமிழர்களும் வர வேண்டும்” என்ற வாக்குறுதிகள் எங்கே போனது?
ஒரு வருட ஆட்சிக்குப் பின் கூட, மாகாண சபைத் தேர்தலுக்கான முறைமை உருவாக்க முடியவில்லை என்றால் — அது அரசியல் வஞ்சகத்தின் தொடர்ச்சியே தவிர வேறில்லை.
சில போலியான “முற்போக்குத் தமிழர்கள்” மற்றும் “இடதுசாரி தமிழர்கள்” இதைப் புரிந்திருந்தாலும், எழுத மறைப்பார்கள். ஏனெனில், அவர்கள் கூறும் “மாற்றுக் கருத்து” என்ற பெயரில் உண்மையைச் சொல்லாமல் மௌனம் காப்பதே அவர்களின் பணி.








