மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளினால் பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 07 மற்றும் நேற்று முன்தினம் இரவு புதுக்குடியிருப்பு சிரம்பையடி பிள்ளையார் ஆலய பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் மீனவர்களின் தோணிகளை சேதப்படுத்தியுள்ளதுடன், நெற்காணிகள் மற்றும் தென்னை,பலா,மாமரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் பயன்தருமரங்களையும் அழித்துள்ளது.

இதுவரை காலமும் படுவான்கரை பகுதி மக்களை துன்புறுத்திய காட்டு யானைகள் இலங்கையின் மிகப்பெரும் வாவிகளில் ஒன்றான மட்டக்களப்பு வாவியினையும் ஊடறுத்துவந்து எழுவான் கரை பகுதியில் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவருகின்றது.
இதன்போது மட்டக்களப்பு வாவிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் நான்கு தோணிகளையும் யானைகள் சேதப்படுத்தியதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
யானைகளை துரத்துவதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசி திணைக்களம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கின்றபோதிலும் யானைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுள்ளதை காணமுடிகின்றது.

எழுவான்கரைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள யானைகளின் தாக்கங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.








