முச்சக்கர வண்டியொன்றில் சவாரிக்கு செல்லும் போர்வையில் ஏறி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை தேடி பொகவந்தலாவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொகவந்தலாவை பெட்ரா சோ தோட்டத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதி இது தொடர்பில் பொகவந்தலாவை காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
கர்கசோல் எஸ்டேட் அலுவலகம் அருகில் இருந்து தனது முச்சக்கர வண்டியில் ஏறிய சந்தேகநபர், நன்றாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனைதொடர்ந்து, குறித்த சந்தேகநபர் ஒரு பழச்சாறு போத்தல் ஒன்றை குடிக்க கொடுத்ததாகவும், அதன்பின்னர் தான் மயக்கமடைந்ததாகவும் காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு சுயநினைவு திரும்பியபோது, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் ஒரு பவுன் தங்க நகை கொள்ளையடிக்கபட்டிருந்தாகவும் இழந்த மொத்த பொருட்களின் பெறுமதி ஐந்து இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் என்று சாரதி ஆதாரங்களை முன்வைத்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இவ்வறானதொரு பின்னணியில், குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.








