இலங்கையில் புத்தர் சிலை விவகாரங்கள் அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கடந்த காலங்களில் நாம் பாடங்களை கற்றுக்கொண்டதுண்டு என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சிலை விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் ஈட்டுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எனவே இந்த சிலை விவகாரத்தை பயன்படுத்திக்கொண்டு தங்களது அரசியல் கனவுகளை நிறைவேற்றும் நோக்கில் மக்களை அணி திரட்டுவதற்கு அரசாங்கம் இடம் அளிக்காது என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் புத்தர் சிலை ஒன்றை சேதப்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய கலவரம் எவ்வளவு பாரதூரமானது என்பது நாம் வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடமாகும்.
அதன் காரணமாகவே குறித்த புத்தர் சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தற்பொழுது அந்த சிலை மீண்டும் குறித்த இடத்தில் நிறுவப்பட்டு உள்ளது எனவும் இந்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்பதை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
காவல்துறையினரின் கடமை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதாகவும் எனவே எந்த ஒரு தரப்பினரும் சட்டத்தை மீறி செயல்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
குறித்த இடத்தில் தற்காலிக அடிப்படையில் சிற்றுண்டி சாலை ஒன்றை அமைப்பதற்கு குறுகிய காலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது சில நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பின்னர், அந்த சிற்றுண்டிச்சாலையை உடைத்து அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியிலேயே குறித்த புத்தர் சிலை அந்த இடத்தில் நிறுவப்பட்டு உள்ளது என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.








