நேற்றைய தினம் (22.11.2025) மலேசியாவின் தீவகற்பத்திக்கும், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மலாக்கா நீரிணை பகுதி (Strait of Malacca) மற்றும் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட ஒரு தாழமுக்க பகுதியானது (a Low Pressure Area)
இன்று காலை (23.11.2025 -08.30am) அதே பிராந்தியத்தில் ஒரு நன்கமைந்த தாழமுக்க பகுதியாக (Well Marked Low Pressure Area) வலுவடைந்து உள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் நாளைய (24.11.2025) தினம் ஒரு தாழமுக்கமாக (Depression) மேலும் வலுவடையும்.
அதன்பின்னர் இந்த தாழமுக்கமானது, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதனை அடுத்தவரும் 48 மணித்தியாளத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு புயலாக (Cyclonic Storm) மேலும் வலுவடையும்.

இதன் காரணத்தினால் இந்த கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 55km/h – 65km/h
வரை வீசுவதுடன் இந்த கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்வதுடன்,
இக்கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
இதேவேளை இந்த காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 70km/h – 75km/h வரை அதிகரித்து வீச கூடும்.
எனவே இந்த கடல் பிராந்தியங்களில் மீனவர் சமூகம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கையின் போது துணிகர செயல் எதிலும் ஈடுபட வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் இவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இவர்கள் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற வானிலை எதிர்வு கூறலை கவனமாக கேட்குமாறும்,
மறு அறிவித்தல் வரை மிகவும் அவதானமாக செயல்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
சில பிரதேசங்களில் முக்கியமாக மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும்
மன்னார், கண்டி, நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இடி மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை மேலும் ஒரு புதிய காற்று சுழற்சியானது, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனை சூழ உள்ள கன்னியாகுமாரி கடல் பிராந்தியத்திற்கு மேலாக எதிர்வரும் 25ஆம் திகதி ஒரு புதிய குறைந்த தாழமுக்க பகுதி உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சிரேஷ்ட வானிலை அதிகாரி
சூரியகுமார்








