பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால், அவைத்தலைவர் பிமல் ரத்நாயக்கவிற்கு, வடமாகாணத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சிகை அலங்கார நிலையங்களால், சிகை அலங்காரத்தை வாழ்வாதாரமாக செய்யும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு தீர்வையும் முன்வைத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இராணுவத்தினர் முன்னெடுக்கும் சிகை அலங்கார நிலையங்களில் குறைந்த கட்டணம் அறவிடுவதனால் அந்த பகுதியில் சிகை அலங்கார நிலையங்கள் வைத்திருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கில் ஒரு இடத்தில் மாத்திரம் தான் சிகை அலங்கார நிலையம் இருப்பதாகவும், அதனால் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இது முற்றிலும் பொய்யான தகவல் என ஆதாரங்களை திரட்டி, பிமல் ரத்நாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன், வடக்கில் மொத்தமாக 04 சிகை அலங்கார நிலையங்களை இராணுவத்தினர் முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தீர்வாக அந்த 04 நிலையங்களையும் மூடுமாறும் கேட்டுக்கொண்டார்.








