மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை இந்தியாவின் சென்னையில் இன்று (07) காலமானார். அவருக்கு 98 வயதை கடந்த வயது மூப்பு காரணமான உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.
செல்லையா இராசதுரை 1956 முதல் 1989 வரை 33 வருடங்கள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். அந்த காலகட்டத்தில், மட்டக்களப்பின் முதலாவது மாநகர மேயராக ஒரு வருடம் பதவியில் இருந்துள்ளார். மேலும், 1979 முதல் 1989 வரை பிரதேச அபிவிருத்தி, இந்து கலாச்சாரம், தமிழ் மொழி அமுலாக்கம் போன்ற துறைகளுக்கான அமைச்சராக கபினட் பதவியிலும் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 1989 முதல் 1994 வரை மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராகச் சேவை ஆற்றினார்.
மட்டக்களப்பில் நேர்மையான மற்றும் மக்கள் பாசமிக்க அரசியல்வாதியாகப் போற்றப்படும் பிரின்ஸ் சேர் அவர்களின் மிக நெருங்கிய மாணவராகவும் இராசதுரை நினைவுகூரப்படுகிறார்.
அவரது மறைவுச் செய்தி மட்டக்களப்பு மற்றும் வடகிழக்கு அரசியல் வட்டாரங்களில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.








