மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று சனிக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததையிட்டு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலையீடு செய்து எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள பாலமீன்மடு கிராம சேவகர் பிரிவில் 410 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் இந்த பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததுடன் பலத்த சேதமடைந்துள்ளதுடன் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் பதில் கடமையாற்றி வந்த கிராம உத்தியோகத்தர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு இருந்த போதும், அந்த பகுதி மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் சிபார்சில் 26 பேருக்கு மட்டும் வீடு பாதிப்புக்கு 25 ஆயிரம் ரூபாவும் நிவாரணம் ஆகியன வழங்கியுள்ளார்.

எனவே உண்மையில் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கிராம அபிவிருத்தி சங்க கட்டிட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சகிதம் சென்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது மக்கள், ‘இந்த பகுதி முற்று முழுதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது .முகத்துவாரம் கடல் மற்றும் களப்பு பகுதியை அண்டியதுடன் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் இந்த கிராமம் இருந்தபோதும், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட போதும் மாநகரசபை உறுப்பினர் தனக்கும் அவர் சார்ந்த 25 பேர் உட்பட 26 பேர் மட்டும் தான் பாதிக்கப்பட்டதாக தகவல் வழங்கப்பட்டு 25 ஆயிரம் ரூபா மற்றும் நிவாரணத்தை பெற்றுள்ளார்.
இது ஒரு முறைகேடு, பிழையானது உண்மையில் பாதிக்கப்பட நாங்கள் இருக்கும்போது இவ்வாறு கிராம உத்தியோகத்தர் பிழையாக செய்யப்பட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிடில் பிரதேச செயலகத்தை முற்றுகையிடும் போராடுவோம் தீர்வு வழங்குமாறு கோரினர்.

இதையடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில் நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் வருவதாக இருந்தார் திடீரென அரசாங்க அதிபர் கூட்டம் என்பதால் வரமுடியாது போயுள்ளது எனவே சில தவறுகள் நடந்துள்ளன. கிராம உத்தியோகத்தர் இந்த பிரிவுக்கு பதில் கடமைக்காக கடந்த இரண்டு மாதம் நியமித்தோம்.
அவர் இதற்கு புதியவர் எனவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதி மொழியை அடுத்து மக்கள் வெள்ளிக்கிழமை நிவாரணம் வழங்காவிட்டால் நாங்கள் பிரதேச செயலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.








