பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் தமது வட்டாரத்திற்கு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பிரபுவின் உறவினர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தமது நியாயமான போராட்டத்தினை அரசியல்ரீதியான போராட்டம் என திசைதிருப்ப முனைவதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் மக்கள் குறைகேள் கூட்டம் நேற்று (18) மாலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகரசபையின் வட்டார உறுப்பினர் ரகுராமின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதி முதல்வர் தினேஸ்குமார், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புன்னைச்சோலை கிராம சேவையாளர் பிரிவில் கடந்த வெள்ள அனர்த்ததின்போது பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் முறையான களஆய்வுகள் முன்னெடுக்கப்படாமல் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்களுக்கு நிவாரணங்களையும் அரசின் வெள்ள அனர்த்த நஸ்ட ஈடுகளையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலைமை ஏற்பட்டதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

தமது கிராம சேவையாளர் பிரிவில் கிராமசேவையாளர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் என பலர் இருந்தபோதிலும் தமது பாதிப்பு தொடர்பில் முறையான ஆவனப்படுத்தல் முன்னெடுக்கப்படவில்லையெனவும் தாங்கள் பாதிக்கப்பட்டபோதிலும் அது தொடர்பில் பதிவுசெய்யச்சென்றால் ஆதாரங்கள் கேட்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இதன்போது தெரிவித்தனர்.
வெள்ள அனர்த்தகாலங்களில் தாங்கள் பாதிக்கப்பட்டு நிற்கின்றபோது எங்களை வீடியோ ஆதாரம் புகைப்படம் ஆதாரம் கேட்டால் நாங்கள் எங்கு செல்வது எனவும் இதன்போது மக்கள் கேள்வியெழுப்பினார்கள்.
பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் கிராம மட்டத்தில் தலைவர்களை நியமனம் செய்யும் விடயத்தில் கிராம மக்களின் எந்த ஆலோசனையும் பெறப்படாமல் ஒருவரை நியமித்துள்ளதாகவும் அவர் தனக்கு விரும்பியவர்களை மட்டும் பாதிக்கப்பட்டதாக காட்டி அவர்களுக்கு மட்டும் அரச நஸ்ட ஈடுகளையும் நிவாரணங்களையும் வழங்கியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தாங்கள் நடாத்திய போராட்டத்தின் பின்னணியில் அரசியல்கட்சி இருப்பதாக கூறி தமது போராட்டத்தின் உண்மைத்தன்மையினை ஏற்றுக்கொள்ளமறுப்பதாகவும் இதன்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபையின் மாமாங்க வட்டார உறுப்பினர் உதயராஜ் தமது அரசாங்கம் நீதியுடன் செயற்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியினை வழங்கும் என தெரிவித்தார்.
இதன்போது உறுப்பினர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட கிராம மக்கள் தமது கிராமத்திற்கு பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நியமனம் குறித்து ஏன் பிரதேச மக்களின் கருத்துகள் உள்வாங்கப்படவில்லை. இந்த நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் சரியான வழிகள் பின்பற்றப்படவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் உறவினர் ஒருவருக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது உங்களுக்கு தெரியுமா எனவும் மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
இந்த நியமனம் தொடர்பில் கட்சியின் உயர்பீடத்திற்கு கொண்டுசெல்வதாகவும் இதன்போது மாநகரசபை உறுப்பினர் தெரிவித்தார்.
பிரஜா சக்தி நியமனங்களில் பிழைகள் நடைபெற்றுள்ளதை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்வோம். பிரஜா சக்தி என்ற நியமனத்தின் மூலம் அரச அதிகாரிகளை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை நாங்களும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் தினேஸ்குமாரும் தெரிவித்தார்.








