மான் பார்மகியூட்டிகல்ஸ் (MAAN Pharmaceuticals) நிறுவனத்தால் நாட்டில் விநியோகிக்கப்படும் ஒந்தன்செட்ரொன் உட்பட 10 மருந்து வகைகளை அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்த மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் உற்பத்தி செயல்முறை தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஒந்தன்செட்ரொன் மருந்து பயன்பாட்டுக்குப் பின்னர் சில நோயாளர்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், இரு மரணங்கள் தொடர்பாக சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அந்த மரணங்களுக்கு மருந்தே நேரடி காரணம் என்ற விடயம் இதுவரை உறுதியாகவில்லை.

இதுகுறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க, மருந்துகள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் போதே தரச் சோதனைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டதா, களஞ்சியம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளின் போது தரத்தில் மாற்றம் ஏற்பட்டதா என்பவற்றை விரிவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 28 நாட்களுக்குள் முழுமையான விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு அச்சம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், தடை விதிக்கப்பட்ட மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் என்ன, ஏன் திடீரென 10 மருந்துகள் இடைநிறுத்தப்பட்டன என்பதற்கான தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சுகாதாரத் துறையின் மீது மக்களின் நம்பிக்கை குறையும் என்றும் அவர் எச்சரித்தார்.
தடை செய்யப்பட்ட மருந்துகள்
Ondansetron Injection USP 8 mg/4 mL (Ondanman 8)
Cefotaxime Sodium for Injection BP 1000 mg (Fotime 1000)
Co‑amoxiclav for Injection BP 1.2 g (Manoxclav 1200)
Co‑amoxiclav for Injection BP 600 mg (Manoxclav 600)
Haloperidol Injection BP 5 mg/mL (Mancalm 5)
Imipenem and Cilastatin for Injection 1 g (Cimi)
Iron Sucrose Injection USP 100 mg/5 mL (Sofer Injection)
Meropenem for Injection USP 1 g (Manpen 1000)
Piperacillin and Tazobactam for Injection USP 4.5 g (Bacpac 4.5)
Sulbactam and Cefoperazone for Injection 1 g (Sulbactone 1)








