தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இட்டு, நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு செல்ல முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடக சுதந்திரம் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் குறித்து இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு ஜனநாயக நாட்டின் நான்கு முக்கிய தூண்களாக சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகியவை விளங்குகின்றன.
ஆனால், தற்போதைய அரசாங்கம் காவல்துறையை கருவியாகப் பயன்படுத்தி, மக்களின் ஜனநாயக உரிமைகளையும், காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் உரிமைகளையும் மீறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் மக்களின் உரிமையைப் பறித்து, ஒரு ‘காவல்துறை அரசை’ (Police State) உருவாக்க அரசாங்கம் முயல்கிறது.
“சுதந்திர ஊடகங்கள் தங்களின் கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைத்தாலும், அதைத் தடுத்து ஊடகங்களை ஒடுக்க காவல்துறையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.
மக்களின் ஆணை சர்வாதிகாரத்திற்கானது அல்ல மக்களின் அமைதியான பெரும்பான்மையினரின் குரலாக சுதந்திர ஊடகங்கள் விளங்குகின்றன. அவற்றை ஒடுக்குவது என்பது சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் செயலாகும்.








