சுனாமி பேரலையால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், நேற்று (26) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 68 கிராம சேவகர் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இப்பேரழிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,840 பேர் உயிரிழந்ததுடன், 908 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், 18,041 பேர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இத்தகைய இயற்கை அனர்த்தங்களில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் நாளாக, இலங்கை அரசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதியை தேசிய பாதுகாப்பு தினமாக அறிவித்து, காலை 9.25 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
நேற்றுடன் சுனாமி பேரலை ஏற்பட்டு 21 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கையளவில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் சுமார் 35,000 பேர் உயிரிழந்ததுடன், 5,637 பேர் காணாமல் போயிருந்தனர். மேலும், சுமார் 9 இலட்சம் வீடுகள் சேதமடைந்திருந்ததுடன், உயிரிழந்தவர்களில் சுமார் 40 வீதமானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்ட உதவி பணிப்பாளர் எ.எஸ்.எம். சியாத், மாவட்ட பிரதம பொறியியலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் பல அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

















