2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழக்கவில்லை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜயபால, சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என்றும் வெளிப்படுத்தினார்.
தேவைப்பட்டால், சாரா ஜாஸ்மினுக்கு எதிராக பிடிவிறாந்து பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

“விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா என்பதை கண்டறிய புதிய அரசாங்கம் விசாரணையை நடத்தி வருகிறது. இது ஒரு ஆழமான விசாரணை, அது தொடர்ந்து கொண்டிருக்கிறது,” என்று கூறிய அமைச்சர் விஜயபால, சில தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட முடியாது என்றும், அது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் சாரா ஜாஸ்மின் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ஆனந்த விஜயபால இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.








