முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்ததுடன் அந்த பகுதியில் மக்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய அன்டனி சில்வெஸ்டர் மற்றும் அவரது மனைவியான 73 வயதுடைய மேரி ஜெர்மைன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் பின்னர், மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
சம்பவத்துக்கான காரணங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.









