பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அரச இலச்சினை திரிபுபடுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தொழில் மற்றும் சிவில் அமைப்பு ஒன்றியம் நேற்று (12) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் அந்த அமைப்பின் பேச்சாளர் வைத்தியர் சமல் சஞ்சீவ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சில தினங்களுக்கு முன்னர், 1972, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புகளின் பின்னர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி பெற்ற அரச இலச்சினையை மாற்றி காட்சிப்படுத்தியிருந்தார்கள். நாட்டின் ஜனாதிபதி மற்றும் நீதிமன்றத்தை விட அரச இலச்சினை உயரியது என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்வதேச மட்டத்தில் அரசியலமைப்பு ரீதியாக பிரதிபலிப்பதாகவும் இந்த இலச்சினை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த காலங்களில் இந்த அமைச்சின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அரச இலச்சினையை எடுத்துக்கொண்டால், அதிலுள்ள சிங்கம் முழுமையாக மாற்றப்பட்டு, தர்மசக்கரம், கலசம், நெற்கதிர்கள், சூரியன், சந்திரன் போன்றவை மாற்றப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட அடையாளமொன்றே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அரசொன்றின் அரச இலச்சினையை புகைப்படமாக உருவாக்குவதற்கு செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது அது சித்திரம் இல்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அரச இலச்சினை இவ்வாறு மாற்றப்பட்டது பாரதூரமான குற்றமாகும். இதிலுள்ள அடிப்படை விடயங்கள் பாடசாலை மாணவர்களுக்கு கூட தெரியும்.
எனவே, யாராவது இந்த அரச இலச்சினையை பற்றி தெரியாமல் பயன்படுத்துகிறார்கள் என்றால் போதியளவு அறிவில்லாதவர்களா இந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருக்கிறார்கள். இவ்வாறு அரச இலச்சினையை மாற்றியமைத்தமையானது பாரிய அரச விரோத சூழ்ச்சியா என்ற சந்தேகமும் எழுகிறது.
அத்துடன், மிகவும் முக்கியமான அமைச்சின் இணையத்தளத்திலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். யாராவது இணையத்தளத்தை ‘ஹெக்’ செய்து மாற்றியிருப்பார்களாக இருந்தால் அதுதொடர்பில் சிந்திக்க வேண்டும். தனக்கு இதுதொடர்பில் தெரியாது என்றும் சம்பந்தப்பட்ட விசாரணைப் பிரிவுகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஒருவாரமாகியும் இதுதொடர்பில் எந்தவொரு விடயத்தையும் வெளிப்படுத்த முடியாது என்றால், பொது மக்களின் பாதுகாப்பு எந்த நிலைமையில் இருக்கிறது. இந்த பாரதூரமான நிலைமை தொடர்பில் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை நீதியின்முன் நிறுத்துமாறு வலியுறுத்தியே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்’’ என்றார்.








