மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட பையை தேடிச் சென்ற படப்பிடிப்பாளர்கள் மீது தாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினர் என தெரிவித்து 4 பேர் கொண்ட குழுவினர் புகைப்பட பிடிப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு குற்ற புலனாய்வு பிரிவு (சிஐடி)யினர் இருவர் உட்பட 4 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்தில் படப்பிடிப்பாளர்கள் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 3.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை படிப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டு விட்டு அங்கிருந்து வெளியேறினர்.
இந்த நிலையில் பை ஒன்றை படப்பிடிப்பு இடம்பெற்ற பகுதியில் தவறுதலாக விட்டுவிட்டு சென்ற அவர்கள் குறித்த பையை தேடியபோது அவர்கள் கடற்கரையில் விட்டுவிட்டு வந்துள்ளதாக அறிந்து கொண்டனர்.

இதனையடுத்து புகைப்பட பிடிப்பு நிறுவனத்தில் கடமையாற்றிவரும் கல்லடியைச் சேரந்த மகேஸ்வரன் யதீசன் என்பவருக்கு சம்பவ தினமான 8.00 மணியளவில தொலைபேசியில் கடற்கரையில் தோல் பை விட்டுவிட்டு வந்துள்ளோம் அதனை தேடி எடுத்துவருமாறு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கடற்கரையில் ரோச் லைற் வெளிச்சத்தை பாவித்து குறித்த கமார உள்ளிட்ட தோல்பையை தேடிக் கொண்டிருந்த போது தோல் பைகிடைத்துள்ளது. ஆனால் அதற்குள் இருந்த தன்னுடைய பெர்ஸ் காணவில்லை என அறிந்துகொண்ட இளைஞன் அங்கு இருட்டுக்குள் பேசிக்கொண்டிருந்த இருவரிடம் கேட்ட போது அங்கிருந்தவர்கள் இளைஞனை பிடித்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில் அந்த இடத்திற்கு இந்த இளைஞனை தேடிவந்த மற்ற இளைஞனையும் பிடித்து, தாக்கி, தொலைபேசி, மற்றும் பொருட்களை பறித்து விட்டு, இருவரையும் வேறாக பிரித்து தாக்குதல் நடத்தியதுடன் பணம் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 4 பெரும் மதுபோதையில் இருப்பது போல தெரிய இரு இளைஞர்களுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பறிக்கப்பட்ட பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு அவர்களிடமிருந்து தப்பியோடியுள்ளனர்.
தப்பி ஓடி உதவி கேட்டு வீட்டாரை அழைத்ததுடன் ஒரு இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மோசமாக காணப்பட்டதால் அவரை வீட்டார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை புகைப்பட நிறுவன தலைவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தமது நிறுவனத்தில் கடமையாற்றியவர்கள் மீது சிஐடி என தெரிவித்த 4 பேர் கொண்ட குழுவினர் தாக்கியுள்ளதாக நடந்தவற்றை தெரிவித்து அவர்களை கண்டால் அடையாளம் காட்ட முடியும் என முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பொலிசார், தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அன்றைய தினம் மாலையில் தாக்குதலை மேற்கொண்ட சிஐடியினரான இருவரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கடற்கரையில் கை விடப்பட்ட நிலையில் கமரா உள்ளிட்ட பொருட்களுடன் பை ஒன்று இருந்த நிலையில் அதனை மீட்டு கொண்டு வந்துள்ளதாக பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது பொலிசார் இரு சிஐடியினரையும் தடுத்து வைத்து கொண்டு முறைப்பாடு செய்தவரை வரவழைத்து அவர்களை காட்டினர் இதன்போது இவர்கள்தான் சிஐடியினர் என தங்களை தாக்கியதாக அடையாளம் காட்டியதையடுத்து இருவரையும் கைது செய்ததுடன் அந்த குழுவைச் சேர்ந்த ஏனைய இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் மட்டக்களப்பில் அமைந்துள்ள சிஐடி பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றி வரும் கம்பளை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ர்ந்தவர் எனவும் மற்றும் அவர்களின் நண்பர்களான மட்டக்களப்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் எனவும் இவர்களை இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதவான் விடுவித்தார்.








