நிருமாணப்பணிகள் முடிவடைந்த நிலையிலுள்ள மட்டக்களப்பு – ஏறாவூர் பொதுச்சந்தைக் கட்டடத்தை திறக்குமாறுகோரி பொதுச்சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சந்தைக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதி உரியஅதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, அவ்விடத்திற்கு வருகைதந்த ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்எஸ்எம். நழீம் இப் பொதுச்சந்தையில் பாரிய மரத்திலுள்ள ஆபத்தான கிளைகள் வெட்டப்பட்டதும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் திறக்கப்படுமென உறுதியளித்தார்.
ஏறாவூர்ப் பொதுச்சந்தைக்கட்டடத்திற்கான நிருமானப்பணிகள் கடந்த பத்துவருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கட்டம் கட்டமாக தொடரப்பட்டன.
தற்போது உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு நிருமானப்பணிகள் முடிவுற்றுள்ளபோதிலும் வர்த்தக நடவடிக்கைக்காக திறக்காதிருப்பதனால் வியாபாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்ப் பொதுச்சந்தை ரெயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் பலவருடகாலமாக தற்காலிக அடிப்படையில் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூர் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தவிசாளர் குறிப்பிட்டபடி சந்தைக்கட்டடம் திறக்கப்படாவிட்டால் தமது எதிர்ப்புப்போராட்டம் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
நகர சபையின் தவிசாளர் எம்எஸ். நழீம் சந்தைக்கட்டடத்தை திறப்புவிழா செய்வதாக பலதடவைகள் கருத்து வெளியிட்ட போதிலும் இதுவரை செயற்படுத்தவில்லை.
இந்நிலையில் தற்காலிக சந்தையில் அடிப்படை வசதிகள் சீராக இல்லை. அத்துடன் வியாபார நடவடிக்கைகளைத் தொடர முடியாதுள்ளது. புதிய சந்தைக் கட்டடத்திறப்பு விழாவை எதிர்ப்பார்த்திருந்த பல வியாபாரிகள் மரணமடைந்துவிட்டார்கள்.
இன்னும் பலர் போதிய வியாபரம் இல்லாததனால் நட்டமடைந்து கடனாளிகளாக உள்ளனர். மேலும் தவிசாளரது கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் நேரம் ஒதுக்கும்வரை சந்தைத் திறப்புவிழாவை தாமதப்படுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் “இது றவூப் ஹக்கீமின் சந்தை அல்ல ஏறாவூர் மக்களுக்கான பொதுச்சந்தை” விரைவாகத் திறக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நகர சபையின் தவிசாளர் எம்எஸ். நழீம் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில்- சந்தைக்கட்டடத்தின் நிருமானப்பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துவிட்டன.
சந்தை அமைந்துள்ள காணி இரண்டு பள்ளிவாயல்களுக்குச் சொந்தமானது. இதனால் சந்தை வளாகத்திலுள்ள பாரிய “வாகை” மரத்தின் ஆபத்தான கிளைகளை அகற்றித்தருமாறு அப்பள்ளிவாயல்களிடம் கேட்டுள்ளோம். “வக்பு” சபையின் அனுமதி கிடைத்ததும் மரக்கிளைகளை வெட்டுவதாக அறிவித்துள்ளனர்.
இதனாலேயே திறக்கும் நடவடிக்கை தாமதமடைந்துள்ளது. இதேநேரம் சந்தைக்கட்டடத்தின் நிருமானப்பணிகளுக்கு உதவிய அனைத்து உள்ளுர் அரசியல்வாதிகளும் அழைக்கப்பட்டு திறப்புவிழா நிகழ்வு நடத்தப்படுமென நகர சபையின் உறுப்பினர் அமர்வில் முடிவு செய்யப்பட்டது.
இந்த அமர்வில் தற்போது ஆர்ப்பாட்டம் செய்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஆனால் தற்போது அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக பொய்யான கதைகளைக்கூறி ஆர்ப்பாட்டம் செய்வது அவர்களது அரசியல் வங்குரோத்துத் தனத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.









