“நவீன பிரபாகரன்களோடு போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்று அனுர அரசை நோக்கி சரத் வீரசேக தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது.
திருகோணமலை டச்ச்பே (Dutch Bay) கடற்கரையில் கடந்த 2025 நவம்பர் 16ஆம் திகதி நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பான வழக்கு, நேற்று (திங்கட்கிழமை, 19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு சென்றிருந்த சரத் வீரசேகர, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
(திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.)

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து பௌத்த சாசனத்தை அவமதித்து வருவதாகவும், பௌத்த பிக்குகளை கைது செய்து சிறையில் அடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இது ஒரு மதத்தின் பாதுகாப்பு என்ற பெயரில், அரசியல் எதிர்ப்பை மத அடையாளத்துடன் கலக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், “ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று பொங்கல் உண்கின்றார்; ஆனால் வடக்கிற்குச் செல்லும் பௌத்தர்களை இனவாதிகள் என முத்திரை குத்தி நிந்திக்கின்றார்” என அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களுக்கே ஜனாதிபதியும் பிரதமரும் துரோகம் இழைக்கின்றனர் என்றும், அந்தத் துரோகத்தின் விளைவாகவே இன்று பௌத்த சாசனம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யகம்பத், மிகிந்தலை விகாரையின் நாயக்க தேரர், மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பல பௌத்த தேரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் திருகோணமலையில் திரண்டிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பும் அரசியல் பதற்றமும் நிலவியது.








