போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் புதன்கிழமை (21) காலை 10.50 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாததால் பொலிஸார், போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.
இது தொடர்பில் பெம்முல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








