டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தங்களது வீடுகள் மற்றும் வளாகங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இது ஒரே நாளில் டெங்கு தொடர்பான வழக்குகளில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகையாகும் என மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் நளின் கல்தேரா தெரிவித்துள்ளார்.
மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களை பராமரித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருந்து டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







